காசாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பணியாற்றவுள்ள குழுவில் இணையுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் மோடிக்கு , ஜனாதிபதி டிரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.
“ காசாவில் அமைதியை வலுப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபாரமான முயற்சியிலும், உலகளாவிய போருக்குத் தீர்வு காண துணிச்சலான புதிய அணுகுமுறையை தொடங்கவும் என்னுடன் இணையுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விரிவான திட்டத்தை நான் அறிவித்தேன்.
20 அம்சங்களை கொண்ட அந்தத் திட்டத்தை அனைத்து உலகத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தத் திட்டத்தில் உள்ள தொலைநோக்குப் பார்வையை வரவேற்றும், அதற்கு ஒப்புதல் அளித்தும் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்மானம் ஒன்றை ஐ.நா.பாதுகாப்பு சபையும் ஏற்றுக்கொண்டது.
தற்போது அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து கனவுகளையும் நனவாக்கும் நேரம் வந்துள்ளது. “ எனவும் மேற்படி கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவரை அமைக்கப்பட்ட குழுக்களில் இதுவே மிகவும் மெச்சத்தக்க, நல்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய குழுவாகும்.
இந்தக் குழு புதிய சர்வதேச அமைப்பாக செயல்படும். இந்த முயற்சி காசாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்தும் உயரிய பொறுப்பைப் பகிர தனிச் சிறப்புமிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.










