காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை

காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா கடந்த 2021 ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர்.

இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, இராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கரீஸ்மா முயற்சித்துள்ளார். இறுதியில் ஷரோன் ராஜை இரகசியமாக கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடியுள்ளார். ஒரு முறை பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை.

இதனையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் திகதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என கொடுத்துள்ளார்.

ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என நினைத்து அதை ஷரோன் ராஜ் அருந்தியுள்ளார்.
தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்துள்ளார்.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார்.

இதையடுத்து அவரது குடும்பம் கரீஸ்மா மீது முறைப்பாடு முன்வைத்துள்ளது. விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.
இந்நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles