இரத்தினபுரி, சிறிபாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெடவல பகுதியில் காதலனால் பொல்லால் தாக்கப்பட்டு காதலி கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது..
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய காதலியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட காதலியும் சந்தேக நபரான காதலனும் நீண்ட நாட்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த காதலன் தனது காதலியை பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த காதலி கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த காதலியின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










