காஹவத்தை, வட்டாபொத்த தோட்டத்திலுள்ள மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
கஹவத்தை, வட்டாபொத்த தோட்டத்தில் நேற்றிரவு தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த நால்வர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்றே தோட்டத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது எனவும், சொத்துகளுக்கு சேதம் இழைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து தகவலறிந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள், சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று அச்சத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு, தெரிவித்ததோடு மேலதிகமாக இச்சம்பவம் தொடர்பாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்காக தான் துணிந்து செயற்படுவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.
