கிரிக்கெட் நிறுவனம் தனி இராஜ்ஜியம் அல்ல – சஜித்

” அமைச்சருக்கும், பாராளுமன்றத்துக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் சபை தனி இராஜ்ஜியம் போல செயற்பட முடியாது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள பாராளுமன்ற அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

விளையாட்டு சங்கங்கள் என்று அழைக்கப்படும் சில சங்கங்கள் பல்வேறு நோக்கங்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டாலும், அவை நடைமுறையில் சங்கங்களாக இல்லை என்றும், இந்த சங்கங்கள் பல்வேறு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அல்லது குழு நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதால், இவை தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களில் ஒன்றாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இருந்தாலும்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு உட்பட்ட பாராளுமன்ற அமைச்சு சார் ஆலோசனைக் குழுவிற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பிரசன்னமாகாதது பிரச்சினைக்குரிய விடயம் என்றும்,பாராளுமன்றத்துக்கும் அமைச்சருக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செயற்பட முடியாது என்றும் அது தனி இராஜ்ஜியம் அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் பெயரளவிலான சங்கங்கள் உருவாவதை தடுக்க முடியாது என்பதால்,புதிய விளையாட்டுச் சட்டம் அல்லது பல சட்டங்களை கொண்டுவருவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும்,இவ்வாறான பெயரளவிலான சங்கங்களுக்கு தண்டனை வழங்கும் முறையொன்றை உருவாக்கினால் இவ்வாறான போலி சங்கங்கள் உருவாக்கப்படுவது நின்றுவிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட விவாத வாரத்தின் விசேட தினமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையினரை அழைத்து வந்து கேள்வி கேட்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles