ஆஸ்திரேலியாவில் கிறீன்ஸ் கட்சி தலைவராக லாரிசா வாட்டர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெல்பேர்ண் தொகுதியில் களமிறங்கிய கிறீன்ஸ் கட்சி தலைவர் ஆடம் பேண்ட் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போது தலைமைப்பதவிக்கு ஏகமனதாக லாரிசா வாட்டர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2011 இல் அவர் கூட்டாட்சி அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் குயின்ஸ்லாந்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டத்தரணியாக 9 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
செனட்டர் லாரிசா வாட்டர்ஸ், கனடாவில் பிறந்தவர். 11 மாத குழந்தையாக அவர் தனது பெற்றோருடன் குயின்ஸ்லாந்தில் வந்து குடியேறியுள்ளார்.
அவர் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்ததால் 2017 ஆம் ஆண்டு தனது செனட்டர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்டது. பின்னர் அவர் கனடா குடியுரிமையை துறந்தார்.
கிறீன்ஸ் கட்சியில் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று தலைமை வழங்கியுள்ளார். அவை தொடர்பான செய்தி தொடர்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
செனட்டர் லாரிசா வாட்டர்ஸ், கிறீன்ஸ் கட்சியில் இணைத் தலைமை பதவியையும் வகித்துள்ளார்.
அத்துடன், ஆஸ்திரேலிய வரலாற்றில்; நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெருமைரும் இவரையே சாரும்.
2017 ஜூன் 22ம் திகதி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற செனட்டர் வாட்டர்ஸ் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார்.
அப்போது சபாநாயகர் , செனட்டர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் தயக்கம் இல்லாமல் எழுந்த அவர், குழந்தைக்கு பாலூட்டியவாரே சட்டமூலமொன்றை தாக்கல் செய்து அதை நிறைவேற்றவும் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.