“கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழு நியமிக்கப்படும்”

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகளைக் கைப்பற்றுவதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.

இன்று (22) பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

கடலரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரையைப் பாதுகாப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, அந்தக் கடற்கரையைப் பாதுகாத்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முறையான திட்டமொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடல் தடுப்புச்சுவர் அமைப்பது கடலரிப்பைத் தடுப்பதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு அல்ல என்பதை மேலும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஒலுவில் துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீன்பிடித் துறைமுகம் குறித்தும் கவனம் செலுத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கக்கூடிய விஞ்ஞான பூர்வமான முறைமை ஒன்றைப் பற்றி விரைவான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரையைக் கொண்ட கிழக்குக் கடற்கரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடற்கரையை அண்மித்து ஹோட்டல்களை நடத்துவதில் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமாக செயற்படுவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பாக தனக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் அத்தகையதொரு நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி நிரப்பல்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, இனிவரும் காலங்களில் அதற்கு இடமளிக்க வேண்டாம் என பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து இங்கு கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்தி, அவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறும் அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு வருடமும் கல்ஓயா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமையினால் அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு, அட்டாளச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று, இறக்காமம், தமன்ன, நிந்தவூர் உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கு வழங்கக்கூடிய நிரந்தர தீர்வு குறித்து அவசர ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

திருக்கோவில் நெல் களஞ்சியசாலை நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் அட்டாளைச்சேனை கழிவு மீள் சுழற்சி நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நுவரகல தொல்பொருள் வன ஒதுக்கீட்டுப் பகுதியைப் பாதுகாத்தல் மற்றும் அருகம்பே, பானம ஆகிய சுற்றுலாப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல், தெஹியத்தகண்டிய ஹேனானிகல தெற்கு ஆதிவாசிகள் கிராமத்தை மையமாகக் கொண்டு மாதுருஓயா வன ஒதுக்கீட்டுப் பகுதியை அண்மித்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் தேசிய நீர் வழங்கல் சபையினால் லாகுகல பிரதேசத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக ஹெடஓயாவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஹிங்குரன கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, கரும்பு விவசாயிகளை தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட வைப்பது நிறுவனங்களின் பொறுப்பாகும் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி விரைவான தீர்வை எட்ட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கல்முனை நகர திட்டமிடல் வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனைப் பகுதியில் தற்போது வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒரே இடத்தில் நிறுவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்குரிய திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்து தர முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை மகாவலி அதிகார சபையினால் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டு, வர்த்தக ரீதியான பெறுமதியைக் கொண்ட திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள காணிகளை மீண்டும் கையகப்படுத்தி அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அவ்வாறான காணிகளை மகாவலி அதிகார சபையிடமிருந்து பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலாளரின் கீழ் கொண்டுவந்து, முறையான திட்டத்தின்கீழ் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அதேபோன்று தெஹியத்தகண்டிய, மஹாஓயா, பதியதலாவ ஆகிய பிரதேசங்களின் வீதிகளை மாகாண, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவந்து அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அம்பாறை மாவட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவுவது அரசியல் ரீதியான பணியன்றி, நிர்வாகப் பணியாகும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, நிர்வாகக் கட்டமைப்புகள் இனங்களின் அடிப்படையில் அமையாமல், நிலப்பரப்பின் அளவு, மக்கள் தொகை போன்ற பொதுவான அளவுகோல்களின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 22,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீதிகள், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் வீட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, இந்த நிதி ஒதுக்கீடுகளை உரிய நிதியாண்டுக்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி மக்களுக்குப் பலன்களைப் பெற்றுக்கொடுப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு உயிரிழப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல், பயிர்ச் சேதங்கள் மற்றும் கால்நடை உற்பத்தித் துறை சார்ந்த சேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல், மீனவச் சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பகுதியளவு மற்றும் முழுமையான வீட்டுச் சேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இங்கு தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

இந்த அனர்த்த நிலைமையினால் பொருளாதார ரீதியாக கீழ் மட்டத்தில் உள்ள மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மக்களுக்கான வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, அம்பாறை மாவட்ட செயலாளர் அநுபம மங்கள விக்ரமாரச்சி உட்பட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles