” கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திங்கட்கிழமை நாடு தழுவிய ரீதியில் போராட்டமும் முன்னெடுக்கப்படும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதென்பது கொழும்பு துறைமுகத்தையே விற்பனை செய்வதற்கு ஒப்பான செயலாகும். முதலீடு, குத்தகை என்ற போர்வையில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு தாரை வார்ப்பதற்கே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாட்டை ஆளும் அதிகாரத்தை மக்கள் 5 வருடங்களே இந்த அரசுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் தாங்கள்தான் நாட்டில் சொந்தக்காரர்கள் என்ற போர்வையில் ஆட்சியாளர்கள் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கும், பல்தேசியக் கம்பனிகளுக்கும் விற்பனை செய்துவருகின்றனர்.
இதற்கு இடமளிக்ககூடாது. தேசிய வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை தோற்கடிக்க வேண்டும். குறிப்பாக கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திங்கட்கிழமை நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும். நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு பிரஜைகளும் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.” – என்றார்.
