குற்றவாளிகள் தப்பவே முடியாது! பிள்ளையானிடம் விசாரணை வேட்டை தீவிரம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானுக்கு தொடர்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்நாட்டில் இனவாதம் மற்றும் அடிப்படை வாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். இது தொடர்பில் ஏற்கனவே சபைக்கு அறிவித்தும் உள்ளோம். இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் அல்ல, வேறு வலுவான மூன்று சட்டங்களைக்கொண்டுவந்து அவற்றை நிச்சயம் ஒடுக்குவோம்.

முன்னாள் பிரதி அமைச்சர் பிள்ளையான் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு தொடர்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பிலும் விசாரிக்கப்படுகின்றது.

எனவே, நாட்டில் இடம்பெற்ற எந்தவொரு குற்றச்செயலையும் மூடிமறைக்க நாம் இடமளிக்கமாட்டோம். குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது. சட்டம், நீதி உரிய வகையில் நிலைநாட்டப்படும். அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles