ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலா அவசரமாக மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தை (தனிநபர் பிரேரணை) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்தார். அதன்பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
நல்லாட்சி காலத்தின்போதே மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜனாதபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
எனவே, இவ்வாறானதொரு குறுகிய காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் சட்டமூலம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் என்ன?
மாகாண முதல்வர் விரும்பக்கூடிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டால் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் உள்ளிட்ட கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனாதிபதி பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இச்சட்டம் கொண்டுவரப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இது தேர்தல் குண்டாகக்கூட இருக்கலாம்.
எனவே, தேர்தல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு சபாநாயகர் இடமளிக்ககூடாது.” – என்றார்.
