கொடுரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார! உரிமைக்காவும், நீதிக்காகவும் தவிக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினர்!

பாகிஸ்தானில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நடந்த கொடுர சம்பவம் உலகையே உலுக்கியது.

பணிக்காக சென்ற இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்தகுமார தியவதன அடித்துக் கொல்லப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவமே அது. இந்தச் சம்பவம் நடந்து தற்போது ஒருவருடம் கடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பொன்று செயல்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்தது. இவ்வாறு தடை செய்யப்பட்ட இன்னும் எத்தனை அமைப்புக்கள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன என்ற கேள்விக்கு விடை தெரியாது. அத்துடன், வெளியுலகுக்கு தெரியவந்த பிரியந்த குமார போல இன்னும் எத்தனை குமாரக்கள் வெளியே தெரியவராமல் மாண்டுள்ளனர் என்ற கேள்விக்கும் விடைதெரியாது.

பிரியந்த குமாரவின் மிலேச்சத்தனமாக கொலை பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை நடுநடுங்கச் செய்தது. இவ்வாறு ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டு நீதி கிடைக்காமல் தவிக்கும் சிறுபான்மையினரும், தமது உரிமைகளைப் பெற முடியாமல் தவிக்கும் சிறுபான்மையினரும் பாகிஸ்தானில் இன்னும் இருக்கின்றனர்.

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்று இவ்வாறு பட்டப் பகலில் கொடுரமான செயல்களில் ஈடுபடுவது என்றால், இன்னும் எத்தனை அமைப்புக்கள் இவ்வாறு இயங்கி வருகின்றது என்ற கேள்வியும் தொடர்கிறது.

யார் இந்த பிரியந்த குமார? என்ன நடந்தது?

பேராதனை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியலாளராக பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பிரியந்த குமார தியவதன, முதலில் இலங்கையில் பிரன்டிக்ஸ் ஆடை உற்பத்தி நிலையத்தில் சேவையாற்றி, அதன் பின்னர் 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.

49 வயதான அவர் இலங்கையின் கனேமுல்ல கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.

இரு பிள்ளைகளின் தந்தையான அவர், சியால்கோட் நகரிலுள்ள ராஜ்கோ இன்ட்ரஸ்ட்ரீஸ் தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வந்தார்.

இவர் இஸ்லாத்துக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக 2021 டிசம்பர் 3 ஆம் திகதி காலை தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து அங்கு ஒன்று கூடியவர்கள் பிரியந்த குமாரவை கொடூரமாகத் தாக்கி, தொழிற்சாலை கட்டடத்தின் உச்சத்தில் இருந்து வீதிக்கு வீசி, வீதியில் வைத்து எரித்துக்கொன்றிருந்தனர்.

இந்த கொடூர சம்பவத்தின் சில காணொளிகள் சமூக வலைத்தளத்தில் பரவத் தொடங்கின. உலகத்தை உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ராஜ்கோ இன்ட்ரஸ்ட்ரீஸ் தனியார் ஏற்றுமதி தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட 900 பேருக்கு எதிராக இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த கொடூர கொலை பதிவான தொழிற்சாலை மற்றும் வரிசாபாத் வீதிப் பகுதி அமைந்துள்ள, அகோகி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ( எச்.எச்.ஓ.) அர்மான் மக்த் இந்த முதற் தகவல் அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

பாகிஸ்தான் தண்டனை சட்டக் கோவையின் 302,397,120,427,431,157,149 ஆம் அத்தியாயங்களின் கீழும், பாகிஸ்தானின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 மற்றும் 11 ஆவது அத்தியாயங்களின் கீழும் தண்டனைக்குரிய குற்றங்களை சந்தேக நபர்கள் புரிந்துள்ளதாக கூறியே, இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.

அவர்களில் 89 பேருக்கு எதிராக தற்போது பாகிஸ்தானின் தண்டனை சட்டக் கோவை மற்றும் பாகிஸ்தான் பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வீடியோக்கள், டிஜிட்டல் சான்றுகள், டிஎன்ஏ சான்றுகள், தடயவியல் சான்றுகள், பிரியந்த குமாரவை பிரதிவாதிகலிடம் இருந்து காப்பாற்ற முயன்ற சக ஊழியர் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் என பல சாட்சிகள் பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றால் பரிசீலிக்கப்ப்ட்டன.

தொழிற்சாலையில் உள்ள 10 டிஜிட்டல் வீடியோ பதிவு உபகரணங்களின் காட்சிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதன் அறிக்கையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் இருந்த வீடியோக்கள் மற்றும் 56 பிரதிவாதிகளின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து மீட்கப்பட்ட காட்சிகளும் சாட்சிகளாக பயன்படுத்தப்பட்டன.

சாட்சி விசாரணைகளை தொடர்ந்து, குற்றம் சட்டப்பட்ட 89 பேரில் 88 பேர், குற்றப் பத்திரிகையில் இருந்த பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்டனர். அதன்படியே முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு மரண தண்டனையும் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்திருந்தது.

உரிமைக்காகவும், நீதிக்காகவும் தவிக்கும் சிறுபான்மையினர்!

மத நிந்தனை என்ற பெயரில் ஒரு உயிரை பலியெடுப்பது அபத்தமானது. பாகிஸ்தான் உள்ளிட்ட உலக வாழ் முஸ்லிம்களும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிருந்திருந்தனர். ஆனால் தடை செய்யப்பட்ட கடும்போக்குவாத மத அமைப்புக்களின் செயற்பாடுகளை பாகிஸ்தான் இன்னும் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Related Articles

Latest Articles