கொரோனாவால் பதுளை மாவட்டத்தல் இதுவரை 17 பேர் உயிரிழப்பு!

பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றினால், இதுவரையில் 17 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

ஹாலி-எலையைச் சேர்ந்த 72 வயது நிரம்பிய ஆணொருவரின் உயிரிழப்பினையடுத்து, மேற்படி அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்நபர் கோவிட் 19 தொற்று அறிகுறிகளுடன், பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இந் நபர் தெல்தெனிய அரசினர் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இத்தகவலை, பதுளை பொது சுகாதாரப் பரிசோதகர் ரணில் பிரியங்கர தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றாளர்கள், சடுதியாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலை தற்போது ஏற்பட்டுவருவதாகவும், ஆகையினால், மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகவும், கிரமமாகவும் மேற்கொள்ளும்படியும், பொது சுகாதாரப் பிரிவினர் கேட்டுள்ளனர்.

பதுளைப் பகுதியில் எல்ல விருந்தகங்கள் இரண்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் மூன்று பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகி, அவர்கள் கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விருந்தகங்கள் இரண்டில் சேவையாற்றும் 32 பேரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இரு விருந்தகங்களிலேயே, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 26ந் திகதி திருமண நிகழ்வு ஒரு விருந்தகத்திலும், கடந்த 27ந் திகதி ‘ஹோம்கமிங்’ நிகழ்வு பிறிதொரு விருந்தகத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட 125 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

பதுளை அரசினர் மருத்துவமனையில் கடமையாற்றும் தாதியொருவருக்கே திருமணம் நடைபெற்றது. இவரது திருமண நிகழ்வும், மறுதினம் ‘ஹோம்கமிங்’ நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இத்திருமண நிகழ்வில் கொழும்பு ‘காசல்’ அரசினர் மருத்துவமனையில் தாதியாக கடமையாற்றுபவரும் சமூகமளித்திருக்கின்றார். இத்தாதி கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியிருப்பது உறுதியாகியிருப்பதாக எல்ல பொது சுகாதாரப் பரிசோதகர் டி.எம். சாகர நந்திக்க தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles