மத்திய மாகாண கோவிட் 19 பாதுகாப்பு குழுக் கூட்டம், மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தலைமையில் இணைய வாயிலாக இன்று நடைபெற்றது.
இக்கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, மத்திய மாகாணத்தில் இதுவரை 1063 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
” கண்டி மாவட்டத்தில் 697 மரணங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 190 மரணங்களும் மாத்தளை மாவட்டத்தில் 176 மரணங்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், 17 இலட்சத்து 43 ஆயிரத்து 469 கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 839,303 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன அதில் 96.4% ஆனோர் முதலாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து இரண்டாம் தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதிற்கு குறைந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 9498 நோய் தொடர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் பிசிஆர் பரிசோதனை 4 198 மற்றும் ஆன்டிஜென் பரிசோதனை 4,748 மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு ஏற்பட்டுள்ள 190 மரணங்களில் 81% 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
மேலும் 354104 முதலாம் கட்ட தடுப்பூசிகளும் 95743 இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன முதலாம் கட்ட தடுப்பூசிகள் 30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் 91.52% வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் மிகவும் ஆர்வமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். மேலும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெற்று தந்தமைக்காக அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பிரஜாசக்தி செயற்திட்டத்தின் தன்னார்வ படையினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தனர்.
		









