கொரோனா கட்டுக்குள் வந்ததும் மாகாணசபைத் தேர்தல்! எதிரணி வலியுறுத்து!

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல்களை நடத்தும் விதம் பற்றி தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. எமது கட்சியும் யோசனைகளை முன்வைத்துள்ளது. உள்ளாட்சிமன்ற, மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஒரு முறைமையின்கீழ் நடத்தப்பட வேண்டும் என அரசு கூறுகின்றது. ஆனால் விகிசாதார முறைமை பாதுக்காக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

மாகாணசபைகளுக்கான தேர்தல் மூன்றாண்டுகள் பிற்போயுள்ளன. எனவே, அதற்கான தேர்தல் முதலில் நடத்தப்படவேண்டும். தற்போதைய நிலையில் நடத்தமுடியாது. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். உள்ளாட்சி சபைகளின் ஆயுட்காலம் அடுத்தாண்டு பெப்ரவரி மாதம்தான் நிறைவுபெறுகின்றது. எனவே, மாகாணசபைகள் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். தேர்தல் என்பது ஜனநாயக உரிமை. அதனை அரசு பிற்போடக்கூடாது.

அதேவேளை, கொரோனா நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாழ்வாதார வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதை ஏற்கமுடியாது. பொருட்களின் விலைகள் இப்படி அதிகரிக்கின்றதெனில் அரசொன்று எதற்கு?” – என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.

Related Articles

Latest Articles