ஒமிக்ரோன் நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடியாதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், தற்போதைய கொரோனா நிலைமை, நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு வழிவகுக்கவில்லையென குறிப்பிட்டார்.
பல மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதிலும் கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர், அந்த நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கொரோனா நிலை மை ஆபத்தானதாக இல்லை. இருப்பினும் அதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்தலாமென்று அர்த்தம் இல்லையென்றும் அவர் தெரிவித்தார். எனவே, அதை மறுபரிசீலனை செய்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க சிறிது காலம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.










