நாட்டிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கை நாளை (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டுவருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியவை வருமாறு,
” கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக இரு விடயங்கள் கருத்திற்கொள்ளப்படவேண்டும்.
கர்ப்பம் தரித்து மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களே தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும். மூன்று மாதங்களுக்கு குறைவான கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது.
அத்துடன், தடுப்பூசி பெறுவதற்குவரும் கர்ப்பிணி பெண்கள் மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்தியர் ஒருவரின் பரிந்துரையை பெற்றுவர வேண்டும்.” – என்றார்.
