கொரோனா 3ஆவது அலையைக் கட்டுப்படுத்த மக்களிடம் ஒத்துழைப்பு கோருகிறது அரசு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் தாம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் அதற்கு பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், நாடு தழுவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்பட்சத்தில் அதனை செய்வதற்கும் தயாராகவே இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கொரோனா நிலைவரம் உட்பட அது சார்ந்த பல விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

இவற்றுக்கு அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்லவும், ரமேஷ் பத்திரணவும் பதில்களை வழங்கினர்.

அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண கூறியவை வருமாறு,

3ஆவது அலை ஊடாக உருவாகியுள்ள திரவு வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. அதன் ஊடாக அதிக பாதிப்புகளும் ஏற்பட்டுவருகின்றன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகின்றது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். பொறுப்புடனும், பொதுநலன் கருதியும் மக்கள் செயற்படவேண்டும்.

தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் ஆலோசனையின் பிரகாரமே முடிவுகள் எடுக்கப்படுகின்றது. இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது. ” – என்றார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் கட்டம், கட்டமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. நாட்டில் நிலவும் நிலைவரத்துக்கமையவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனவே, இன்று காலை எடுக்கப்பட்ட முடிவு மாலை மாறலாம். சிலவேளை நாடு தழுவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிவரின் அது பற்றியும் பரீசிலிக்கப்படும். எது எப்படியிருந்தாலும் நிலைமைக்கேற்பவே சுகாதார தரப்பின் ஆலோசனைக்கமைய முடிவுகள் எடுக்கப்படும்.

இந்தியாவில் தற்போது நெருக்கடியான நிலை உருவாகியுள்ளது. எமது நாட்டில் உள்ள மக்கள் புத்தி உள்ளவர்கள். எனவே, பொறுப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles