இறக்குவானை – ஸ்பிரிங்குட் பகுதியில் இன்று காலை முதல் நடைபெற்ற போராட்டம் காரணமாக, இறக்குவானை – தெனியாய பிரதான வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இறக்குவானை பகுதியில் நடத்தப்பட்டு வரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
குறித்த பகுதியிலுள்ள நபரொருவர் பல வருட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
இந்த நபரின் செயற்பாடுகள் காரணமாக தமது பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான பாவனை அதிகரித்துள்ளதாகவும், அதனால் தாம் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை தடுத்து நிறுத்த பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக இரண்டு மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
போராட்டம் நடைபெற்ற பிரதேசத்திற்கு வருகைத் தந்த இறக்குவானை பொலிஸ் அதிகாரிகள், சந்தேகநபருக்கு எதிராக தாம் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதிவழங்கிய போதிலும், பிரதேச மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
சந்தேகநபரை அழைத்து வந்து, பிரதேச மக்களிடம் பகிரங்கமாக தாம் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக உறுதி வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
சந்தேகநபருக்கு எதிராக இறக்குவானை நீதிமன்றத்தில் இன்றைய தினம் வழக்கொன்று உள்ளமையினால், சந்தேகநபரை போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலைமை உள்ளதாக பொலிஸார் பிரதேச மக்களிடம் தெரிவித்திருந்தனர்.
அதேவேளை, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளமையினால் உடனடியாக சந்தேகநபரை அழைத்து வருவதில் சிக்கல் நிலைமை உள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை பிரதேசத்திற்கு அழைத்து வந்து இந்த உறுதிமொழியை எழுத்து மூலம் விரைவில் பெற்றுத் தருவதாகவும் கூறியிருந்தனர்.
அதற்கும் பிரதேச மக்கள் இணக்கம் வெளியிடாது மக்கள் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், சுமார் 2 மணிநேரம் வரை ஸ்தம்பிதமடைந்திருந்த போக்குவரத்து நடவடிக்கைகள் பொலிஸாரின் தலையீட்டில் வழமைக்கு திரும்பிய போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சந்தேகநபருக்கு எதிராக இறக்குவானை நீதிமன்றத்திலுள்ள வழக்கு விசாரணைக்கு சந்தேகநபர் வரும் பட்சத்தில், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து எழுத்துமூல உறுதிமொழியை பெற்றுத் தருவதாக பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு உறுதி வழங்கியுள்ளனர்.
சந்தேகநபர் அழைத்து வரும் வரை தமது போராட்டம் தொடரும் என பிரதேச மக்கள் அறிவித்த நிலையில், தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.










