பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்தாலும், சங்கத்துக்கான சந்தாக்கட்டணத்தை அதிகரிக்காதிருக்க மலையக மக்கள் முன்னணி உத்தேசித்துள்ளது என அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள் பக்கம்நின்று குறித்த முடிவை எடுக்க வேண்டும் என பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே முன்னணி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் கட்டத்துக்கு வந்துள்ளது எனவும் அறியமுடிகின்றது.
தற்போது தோட்டத்தொழிலாளி ஒருவரிடமிருந்து மாதாந்தம் 233 ரூபாவை தொழிற்சங்கங்கள் சந்தாவாக பெற்றுவருகின்றன.
அடிப்படை நாட் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை தொழிலாளர்கள் மாதாந்த சந்தாவாக செலுத்த வேண்டும். இதன்படி அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது சந்தா கட்டணமும் கடந்தகாலங்களில் அதிகரிக்கப்பட்டது.
கடந்த முறை அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டபோது தொழிற்சங்கங்கள் 233 ரூபாவை சந்தாவாக பெற்றன, இம்முறை அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபா வழங்கப்படும்பட்சத்தில் 300 ரூபாவை சந்தாவாக பெறக்கூடும். ஆனாலும், மலையக மக்கள் முன்னணி இம்முறை சந்தா கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளது.
நமது நிருபர் – லாவண்யா