மோசடி சம்பவம் தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, மேற்படி ஆணைக்குழுவுக்கு அழைத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமக்கு சொந்தமில்லாத சொத்துக்கள், போராட்டக் காலத்தில் அழிவடைந்துள்ளதாக தெரிவித்து, ஒரு கோடிக்கும் அதிகமான நட்டஈட்டை அவர் பெற்றுக்கொண்டுள்ள சம்பவம் தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேறு சம்பவங்கள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரது புதல்வரான முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்ர ராஜபக் ஷவிடம் கடந்த 5ஆம் திகதி விசாரணைகளை பதிவு செய்திருந்தது.
இதேவேளை, பல்வேறு ஊழல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அரசியல்வாதிகள் 20 க்கும் அதிகமானோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இக்காலங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.