” சமஷ்டி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம். ஒற்றையாட்சியை அடிப்படையாகக்கொண்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். மாகாணசபை முறைமையை இல்லாது செய்வதா என்பது தொடர்பில் மக்களிடம் கருத்துகள் பெறப்படவேண்டும். அதேபோல் புதிய அரசியலமைப்பை இயற்றும்போது எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் அடிபணியமாட்டோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் நாமல் மேலும் கூறியதாவது,
” பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதே எமது அணியின் இலக்காக இருக்கின்றது. அதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என நம்புகின்றேன். தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலமைப்பு ஆகிய விவகாரங்களின்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகின்றது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டவேளையில் சில அரசியல் கட்சிகள் நிபந்தனைகளை முன்வைத்து பேரம்பேசுவதை காணக்கூடியதாக இருந்தது. குறித்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பின் இறுதி கட்டத்தில்கூட நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு காரணம் என்ன? கடந்த அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. சலுகைகள் உட்பட இதர விடயங்களைக்காட்டியே தேவையான ஆதரவை வாடகைக்கு பெற்றிருந்தது.
எமது ஆட்சியில் இதற்கு இடமளிக்கமாட்டோம் புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியை முன்னெடுக்கும்போது அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியவும்மாட்டோம். மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலமைப்பொன்றே உருவாக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குறுதி வழங்கினோம். எனவே, அதற்காக மக்களின் கருத்துகளை பெறுவோம். இடதுசாரி மற்றும் தேசியவாத கட்சிகளின் ஆதரவையும் பெறுவோம். ஒற்றையாட்சியை அடிப்படையாகக்கொண்டே எல்லாம் இடம்பெறும்.
சந்தர்ப்பவாத, அடிப்படைவாத மற்றும் இனவாத அரசியல் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம். எனவேதான் எமக்கு மூன்றிலிரண்டு பலத்துடன் பலமான நாடாளுமன்றத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அதேவேளை, ஒற்றையாட்சி என்பதில் எமது அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. சமஷ்டிக்கு நாம் எதிர்ப்பு. மாகாணசபை முறைமையை தக்கவைப்பதா அல்லது மாவட்ட முறைமைக்கு செல்வதா என்பது தொடர்பில் மக்கள் ஊடாக கருத்தறியவேண்டும். பரந்தப்பட்ட கலந்துரையாடல் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு இயற்றப்படவேண்டும். 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதுபோல அவசர, அவசரமாக செய்யமுடியாது.” – என்றார்.