முல்லைத்தீவு நீதிவான் தொடர்பில் சரத் வீரசேகர எம்.பி தெரிவித்த கருத்துக்கு எதிராக இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை நடத்த முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றில் முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும், ஆற்றிய உரையைக் கண்டித்தே இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச்சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் அடையாள கண்டனப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு நட்புரிமையுடன் கேட்டுக்கொள்வதாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










