சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு மைத்திரி வலியுறுத்து

நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அரச பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்படி யோசனையை முன்வைத்தார்.

” நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முக்கியமாக அதேபோல முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டிய விடயங்களுக்கே அரசு ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும். வீதி புனரமைப்பு போன்ற பணிகளை உடன் நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மருந்து பொருட்களை வாங்குவதற்கான டொலர்களை திரட்டிக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் கூட்டணி ஒன்றை அமைத்தோம். தேர்தலுக்கு பிறகு அந்த கூட்டணி கூடவே இல்லை. எமக்கு அரசுக்குள் கதைப்பதற்கு இடமும் இல்லை. எனவேதான் இப்படியான கூட்டங்களை நடத்தி யோசனைகளை முன்வைக்கின்றோம்.

எதிரணிகளும் ஆட்சிமாற்றம் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டை மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ” – என்றார்.

Related Articles

Latest Articles