அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதும், அந்த திருத்தங்களையும் உள்வாங்கி பொது வாக்கெடுப்புக்கு செல்லாத வகையிலேயே திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படுமென நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
நீதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் ,அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தில் வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் திருத்தங்கள் முன்வைக்கப்பட மாட்டாது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், இதனுடன் தொடர்புடைய திருத்தங்களில் மாற்றம் ஏற்பட்டால், அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நடைபெறும். அத்துடன், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கேற்ப, குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் மீது எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளதுடன், 22ஆம் திகதி இரவு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.
21,22ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை விவாதத்தை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், 22ஆம் திகதி இரவு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
