சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே வெளிவிவகார அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
“ பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட முழமையான இழப்பு தொடர்பான சரியான மதிப்பீடு இல்லை.
உலக வங்கி மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஆரம்பக்கட்ட அறிக்கை கிடைத்த பின்னர் மாநாடு நடத்தப்படும்.
எனினும், முழமையான இழப்பு தொடர்பான துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும்.
சர்வதேச கொடையாளர் மாநாடு தொடர்பில் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எமக்கு கடன் தவணை சலுகையை வழங்குவதற்கு சில நாடுகள் வாய்மூல உத்தரவாதத்தை வழங்கியுள்ளன.
எனவே, குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையால் மீண்டெழ முடியும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
