பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற 3 ஊழல் கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 அரச வங்கிகளிடமிருந்து இரண்டரை மில்லியன் ரூபா பணத்தை ஊவா மாகாண சபைக்காக பெற்றுக்கொண்டு அதனை சாமர சம்பத் தசநாயக்க அறக்கட்டளை வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டமை இந்த குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
மற்றுமொரு அரச வங்கியிடமிருந்து மாகாண சபைக்காக பெற்றுக்கொண்ட ஒரு மில்லியன் ரூபா பணத்தை முதலமைச்சராக வங்கிக்கிளையிலிருந்து நேரடியாக அவர் பெற்றுக்கொண்டமை இரண்டாவது குற்றச்சாட்டாகும்.
மற்றுமொரு அரச வங்கியிடமிருந்து பணத்தை கோரியபோதிலும் அதனை முகாமையாளர் நிராகரித்ததன் பின்னர் மாகாண சபை நடத்திச்சென்ற அனைத்து நிலையான வைப்புகளையும் அந்த வங்கியிலிருந்து மீள பெற்றுக்கொண்டமையால் 23 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியமை மூன்றாவது குற்றச்சாட்டாகும்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சாமர சம்பத் தசநாயக்க இன்று(27) காலை 9.30 க்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
