சிஐடிக்கு அழைத்து எமது வாயை மூட வைக்க முடியாது!

 

“ 323 கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டைவிட்டு தப்பியோடும் திட்டம் உள்ளது. எனவே, அவர்களை வெளிநாடு செல்வதை தடுப்பதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவதற்காக கம்மன்பில சிஐடிக்கு நேற்று வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சிஐடி வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில,

“ பரிசோதனையின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு தீர்மானம் எடுத்த குழுவின் தலைவராக செயற்பட்டவர்தான் சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட. அவர்தான் ஊடக சந்திப்பை நடத்தியுள்ளார். எனவே, நடவடிக்கைகள் தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துகளை எவ்வாறு நம்புவது? கள்வனின் தாயிடமே கள்வனைப் பற்றி குறிபார்ப்பதுபோல்தான் இது உள்ளது.” என சுட்டிக்காட்டினார்.

இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாட்டைவிட்டு ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு தப்பிச்செல்லும் திட்டம் உள்ளது. எனவே, அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு சிஐடியிடம் கோரவுள்ளோம்.

குற்றம் நடந்தது பற்றி விசாரணை இல்லை. அது பற்றி கதைத்தவர்கள்தான் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். விசாரணைக்கு அழைத்து எமது வாயை மூட முடியாது.” – என கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles