தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அமரர் ரட்ணசாமியின் மறைவைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
1970 ஆண்டு முதல் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து பல்வேறு பதவிகளை வகித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து செயற்பட்ட செயல் வீரனாவார்.
மஸ்கெலியா ,பியவுன்ஸ்வீக் தோட்ட எமிலினா( பால்காமம்) பிரிவின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவராக எழுபதுகளில் செயல்பட்டவர். அதன் பின்பு மஸ்கெலியா மாவட்டத் தலைவராக சேவையாற்றினார்.
1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின்பு தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளராகவும் உப தலைவராகவும் பலமுறை தெரிவுசெய்யப்பட்டார். இவர் உதவி நிதிச் செயலாளராகவும் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார்.
இறுதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவராக பொறுப்பு வகித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டவர்.
தொழிலாளர் தேசிய சங்கத்திற்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
வயது முதிர்ந்திருந்தாலும் கம்பீரமாகவும் தைரியமாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர். மஸ்கெலியா பிரதேசத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்காக மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டவர்.
அன்னாரின் திடீர் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.