அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
” எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் அமெரி;கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்புடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினேன்.” எனவும் அவர் கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பு துறையில் இருநாடுகளும் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும். பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும்.
விண்வெளித் துறையில் இந்தியா, அமெரிக்கா இடையே நெருங்கிய உறவு நீடிக்கிறது. இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள், விரைவில் இந்திய ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்படும்.” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்திய, பசிபிக் கடல் பகுதிகளில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா அடங்கிய குவாட் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.” எனவும் பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகம் எங்கள் உறவில் முக்கிய இணைப்பாகும். இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டனில் புதிய இந்திய தூதரகங்கள் திறக்கப்படும். இந்தியாவில் கல்வி வளாகங்களைத் திறக்க அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அழைப்பு விடுக்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கின்றார்.
