சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: வீதிக்கு வந்த தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்துக்கு முன்னால் நேற்று பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. கட்சி தலைமையகம் மூடப்பட்டிருந்ததால் வீதியோரத்தில் வைத்து கட்சி செயலாளராக தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டிய நிலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு ஏற்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை அப்போது கட்சி தலைவராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன நீக்கினார். அவரின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டது. இதற்கு எதிராக தயாசிறி ஜயசேகர நீதிமன்றத்தை நாடினார். இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில்,

தயாசிறி ஜயசேகரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்குவதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுச்செயலாளராக தமது பொறுப்புகளை ஏற்பதற்கு தயாசிறி ஜயசேகர நேற்று முற்பகல் கட்சி தலைமையகத்துக்கு வந்தார். அவர் வருவதற்கு முன்னர் கட்சி ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் மூடப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அலுவலகத்தக்கு செல்லும் வழியும் பூட்டப்பட்டிருந்தது.
தலைமையகத்தை சூழு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.

கட்சி அலுவலகத்தை திறப்பதற்கு ஆதரவாளர்கள் முற்பட்டனர். அதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தயாசிறி ஜயசேகர வருகை தந்தார்.

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தலைமையகத்தை திறப்பதற்கு முற்பட்டார். இதன்போது பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. தலைமையகத்தை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற தீர்ப்பை கட்சி தலைமையக கதவில் தயாசிறி ஜயசேகர ஒட்டினார். பின்னர் கட்சி தலைமையகத்துக்கு முன்னால் உள்ள வீதியோரத்தில் வைத்து மத அனுஷ்டானத்துடன் கடமையேற்றார்.

அரசும், நிமல்சிறிபாலடி சில்லா அணியுமே இந்த செயலில் ஈடுபட்டுள்ளது என தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார். நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் எனவும், இந்த அரசின் ஆயுள் காலம் இன்னும் மூன்று மாதங்கள்தான் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles