சென்னை அணி அபார வெற்றி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.

சென்னை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 52 ஓட்டங்களையும் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் உனத்கட், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஹெட் 13 ஓட்டங்கள் மற்றும் அபிஷேக் சர்மா 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் டக் அவுட் ஆனார்.இதையடுத்து எய்டன் மார்க்ரெம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நிதிஷ் ரெட்டி 15 ரன்னிலும், மார்க்ரம் 32 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய கிளாசென் 20 ரன்னிலும், அப்துல் சமத் 19 ரன்னிலும், ஷபாஸ் அகமது 7 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

Related Articles

Latest Articles