செம்மணி மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 355 ஆக உயர்வு!

 

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, சிறுவர்களின் 4 எலும்புக்கூடுகளும், குழந்தையின் ஓர் எலும்புக்கூடும் உட்பட மொத்தம் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 355 ஆக உயர்வடைந்துள்ளது.

செம்மணிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆம் நாள் அகழ்வாய்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

இன்றைய தொடர் அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக மேலும் 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மண்ணுக்குள் இருந்து அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன.

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் இதுவரை மொத்தமாக 355 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 341 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles