பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் சூத்திரதாரி இஷாரா செவ்வந்தி இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய படகு யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெற்கில் இருந்து வடக்குக்குத் தப்பி வந்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்த செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த சில தினங்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆனந்தன், மீன்பிடிப்பதற்காகக் கடற்றொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட படகே நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
7598 என்ற இலக்கத்துடன் காணப்படும் படகு தற்போது யாழ். பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
