” தேசபந்து தென்னகோன் விவகாரத்தில் மட்டுமல்ல தமிழினப் படுகொலைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கும் நீதி விசாரணை வேண்டும். எனவே, இந்த செம்மணி விவகாரத்தில் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை சர்வதேச விசாரணைக்கு தயார்படுத்த வேண்டும்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி.,
” பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையானது மிகப்பெரும் அநீதிக்கு எதிரானது. மக்கள் பட்ட துயரங்கள், அனுபவித்த சித்திரவதைகள், நடந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களோடு சம்பந்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரானது என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதனை வரவேற்கின்றோம்: ஆதரிக்கின்றோம்.
ஏனெனில் நாமும் இதே துன்பங்களை, சித்திரவதைகளை சந்தித்த ஒரு இனம் என்ற வகையிலும் தொடர்ச்சியாக இந்த நாட்டிலே பல்வேறுபட்ட பொலிஸ் அராஜகங்களுக்கும் , இராணுவ அராஜகங்களுக்கும் முகம் கொடுத்து இன்றுவரை வாழ்கின்ற இனம் என்ற அடிப்படையில் இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்கின்றோம்.
செம்மணியில் தமிழர்களுடைய எலும்புக்கூட்டுத்தொகுதிகள் வெளிவரக்காரணமாக உள்ள கொலையாளிகள் யார் ? இக்கொலைகளை யார் செய்தார்கள்? தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீங்கள் கொண்டுவரவுள்ள நீதியை தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கொண்டுவர தயார் இல்லை. அந்த தெளிவான மனநிலை உங்களிடம் இல்லை. இதில் ஒரு சர்வதேச மேற்பார்வையை கொண்டுவாருங்கள் என்று கேட்டால் கூட அரசு அதில் தெளிவில்லாத நிலையில் உள்ளது.
சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க தயார் என கிருஷாந்தி குமாரசாமி வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அறிவித்துள்ளார். எனவே, இந்த செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்சவை நீங்கள் சர்வதேச விசாரணைக்கு தயார்படுத்துங்கள். உண்மைகள் வெளியே வரட்டும்.” – என்றார்.
