பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவி நீக்கம் செய்துவிட்டு, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளியிடப்பாடமல் உள்ள இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகளை நேற்று வெளியிடுவதாக கம்மன்பில அறிவித்திருந்தார்.இதற்கமைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஒரு அறிக்கையை மாத்திரமே கம்மன்பில வெளிப்படுத்தினார்.
அடுத்த அறிக்கை ஒக்டோபர் 28 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.அல்விஸ் ஆணைக்குழு அறிக்கையே நேற்று வெளியிடப்பட்டது. இமாம் ஆணைக்குழு அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது.
இதன்போது கம்மன்பில மேலும் கூறியவை வருமாறு,
‘ கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குல் நடத்தப்படவுள்ளது என வெளிநாட்டு புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது என்று அரச புலனாய்வு பிரிவின் பிரதானியால், சிஐடியின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளராக பதவி வகிக்கும் ரவி செனவிரத்னவே அப்போது சிஐடியின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றியுள்ளார்.தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை இலக்கங்கள், தொலைபேசி இலக்கங்கள், முகவரிகள், நடமாடும் இடங்கள் உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் ரவி செனவிரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 9 ஆம் திகதி தகவல்கள் அடங்கிய அறிக்கை வந்தபோது தான் வெளிநாடு சென்றிருந்ததாகவும், மீண்டும் நாடு திரும்பிய பின்னர் 16 ஆம் திகதியே அறிக்கையை பார்த்தாகவும் ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பதில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஒருவரை பணிக்கு அமர்த்திவிட்டே அவர் வெளிநாடு சென்றிருந்தார். இரகசியம் என வரும் கடிதத்தை திறக்க வேண்டாம், யாருக்கும் அனுப்ப வேண்டாம் என ரவி செனவிரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு ரவி செனவிரத்ன வழங்கியுள்ள சட்டவிரோத ஆலோசனையால், அந்த அறிக்கையை பதிலுக்கு இருந்தவர் பார்க்கவில்லை. மேசையிலேயே இருந்துள்ளது.
ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதியே ரவி செனவிரத்ன இந்த அறிக்கையை பார்த்துள்ளார். விசாரணை நடத்தி மே மாதம் முதலாம் திகதி அறிக்கை வழங்குமாறு அவர் குறிப்பொன்றை எழுதியுள்ளார். எனினும், சிஐடிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நாகாமுல்ல என்பவருக்கு அதனை அனுப்புவதற்கு 19 ஆம் திகதியே அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்படும்வரை பிரதி பொலிஸ்மா அதிபர் நாகாமுல்லவுக்கு கடிதம் கிட்டவில்லை. 22 ஆம் திகதியே சென்றுள்ளது.
அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடிதமொன்று 12 நாட்கள் இருந்துள்ளன. அதி இரகசியம் எனக் குறிப்பிட்டிருந்த கடிதம் தொடர்பில் நாகாமுல்லயை நேரில் அழைத்து ஏன் கடிதத்தை கையளிக்கவில்லை? புலனாய்வு பிரிவின் அறிக்கை வாசிக்கப்பட்டதா என்ற சந்தேகமும் உள்ளது.
ரவி செனவிரத்தவின்கீழ் ரிஐடியும் இருந்துள்ளது. அவருக்கு சஹ்ரான் உள்ளிட்ட தரப்புகளை பற்றி தெரியும். அவர் கடிதத்தை வாசித்திருந்தால் சஹ்ரான் குழுவை கைது செய்திருக்கலாம்.
சிஐடியின் 12 நாட்கள் இந்த கடிதம் இருந்திருக்காமால், முறையாக பார்க்கப்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம். உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம்.
இப்படிபட்ட ரவி செனவிரத்னதான் தற்போது பொலிஸின் உயர் கதிரையில் (பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்) உள்ளார். எனவே, அவரின் கண்காணிப்பின்கீழ், புதிய விசாரணைகள் முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. சுயாதீனமான முறையில் பொலிஸாரால் விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா?
ரவி செனவிரத்தன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, அந்நியமனத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்டி இருந்தோம்?
பதவிகளுக்கு தகுதியான நபர் நியமிக்கப்பட வேண்டும், அதனை இனங்காணும் ஆளுமை ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும். அது இல்லை என்பது நிரூபனம் ஆகிவிடும் என்பதால் இந்த அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாம். தனது சகாக்களை பாதுகாப்பதற்காகவும் அவர் இதனை வெளியிடாமல் மறைத்திருக்கக்கூடும்.
இந்த அறிக்கைகளை வெளிப்படுத்த வேண்டியது ஜனாதிபதியின் கடப்பாடாகும். ஏனையோர் வெளியிட முடியாது. ஏனெனில் அவை ஜனாதிபதியிடம்தான் கையளிக்கப்படும்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்பதவியில் அவர் இருக்கும்வரை நீதியை எதிர்பார்க்க முடியாது.
தகுதியற்ற நியமனத்தை வழங்கி ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவி நீக்க வேண்டும். அத்துடன், மக்களுக்கு தகவல் உரிமை உரிமை உள்ளது. எனவே, அறிக்கையை வெளியிடாமல் அதனை தடுத்து ஜனாதிபதி அரசமைப்பை மீறியுள்ளார்.
எனவே, அதிகார துஷ்பிரயோகம், அரசமைப்பு மீறல் சம்பந்தமாக நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – என்றார்.