ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை (22) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சரின் உரை நாளை மறுதினம் 23 இடம்பெறவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கை உட்பட 9 நாடுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், 22 ஆம் திகதி ஆரம்ப உரையின்போதும் சில நினைவூட்டல்களை அவர் செய்வார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கையை ஏற்கனவே நிராகரித்துள்ள இலங்கை, 23 ஆம் திகதி அதற்கான விளக்கத்தையும், குற்றச்சாட்டுகளுக்கான பதில்களையும் வழங்கவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு உரையாற்றுவதற்கு 20 நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதால் உறுப்பு நாடுகளுக்கு, குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கான சான்றுகளை இலங்கை அறிக்கைமூலம் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைமீது புதியதொரு தீர்மானத்தை இம்முறை கொண்டுவரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு சீனா, ரஷ்யா உட்பட மேலும் சில நாடுகள் எதிர்ப்பை வெளியிடக்கூடும் என இலங்கை தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, மார்ச் 19 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், நிமல்சிறிபாலடி சில்வா, உதயகம்மன்பில, சரத்வீரசேகர மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கொழும்பில் இருந்தவாறே இக்குழு ஜெனிவா விவகாரத்தைக் கையாளும். இதற்காக வெளிவிவகார அமைச்சில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினேஷின் உரைகூட ஒன்லைன்மூலமே இடம்பெறவுள்ளது.