எதிரணிகளை ஒன்றிணைந்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்காக டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை விடுத்துள்ள அழைப்பை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. நிராகரித்துள்ளதென நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் இருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாக செயற்படும் டலஸ் அணியில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இந்நிலையில் எதிரணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவ்வணி ஈடுபட்டுவருகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடனும் இணைந்து செயற்பட்டுவருகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் ஜே.வி.பியினரை சந்தித்து டலஸ் அணியினர் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது கூட்டணி பற்றி பேசப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், எதிரணி கூட்டணியில் ஜே.வி.பியையும் இணைத்துக்கொள்வதே டலஸ் தரப்பின் திட்டமாக இருந்ததுள்ளது. அதனை இலக்காகக்கொண்டே டலஸ் அணி பேச்சுக்கு சென்றிருந்தது. எனினும், அம்முயற்சி கைகூடவில்லை.
டலஸ் அணியுடன் தேர்தல் கூட்டணிக்கு இடமில்லை எனவும், தேர்தல் போன்ற விடயங்களை வென்றெடுப்பதற்கு பொது இணக்கப்பாட்டுடன் செயற்படலாம் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
மக்களுடன்தான் எமது அணி கூட்டணி அமைக்கும் எனவும் ஜே.வி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










