பூஸா சிறைச்சாலையை தீவு பகுதியொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இடம் குறித்த அறிவிப்பை தற்போது வெளிப்படுத்த முடியாது – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள்தான் பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அது அதிஉயர் பாதுகாப்பு வலயமெனக் கூறப்படுகின்றது. ஆனால் சாதாரண சிறைச்சாலைபோன்றுதானே அங்கு நிலைமை உள்ளது. இது கண்காணிக்கப்பட்டா என்ற கேள்விக்கு பதிலளித்த நீதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” பூஸா சிறைச்சாலைக்கு நான் செல்லவில்லை. பூஸா சிறைச்சாலை உயர் உயர் பாதுகாப்பு வலயம் எனக் கூறப்பட்டாலும் அங்கு தொலைபேசிகள் மீட்கப்படுகின்றன. ஜாம்பர் பொருத்தினால் அருகிலுள்ள வீடுகளுக்கும் தொலைபேசி அழைப்புகள் வராது.
எனவே, பூஸா சிறைச்சாலை வேறொரு இடத்துக்கு மாற்றப்படும். தீவு பகுதியொன்றுக்கு கொண்டுசெல்லப்படும். இன்னும் இறுதி முடிவை எடுக்காததால் இடத்தை வெளியிட முடியாது.
தீவாக இருந்தாலும் சிறைக்கைதிகளை அவர்களின் சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்.
கைதிகளுக்குரிய உரிமைகள் பாதுகாக்கப்படும். தூரம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சட்டத்தரணிகளுக்குரிய கொடுப்பனவை வழங்கினால் அவர்கள் செவ்வாய்கிரகத்துக்குகூட செல்வதற்கு தயாராகவே உள்ளனர்.” – என்றார் நீதி அமைச்சர்.