” மன்னர் காலத்தில் திஸ்ஸ விகாரைக்கு வழங்கப்பட்ட காணியில் தற்போது ஒரு சதவீதமே எஞ்சியுள்ளது. அதையும் தனியார் காணியெனக்கூறி கொள்ளையடிக்க முற்படுகின்றனர்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” யாழ்ப்பாணத்திலுள்ள திஸ்ஸ விகாரை புராதன விகாரையாகும். அந்த விகாரைக்கு மன்னர்கள் வழங்கிய காணியில் நூற்றுக்கு ஒரு சதவீதம்கூட தற்போது இல்லை.
அந்த ஒரு சதவீத காணியையும் தனியார் காணியென்கூறி கொள்ளையடிக்க முற்படுகின்றனர். மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்த முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதனை பொருட்படுத்தாது, பொலிஸார் முன்னிலையிலேயே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல மண்வெட்டியையும் எடுத்துவருமாறு அழைக்கின்றனர். இதுவிடயத்தில் சட்டம் உரிய வகையில் செயல்படாதது ஏன்?” – என்றார்.
