ஜனாதிபதி அநுரவின் வெற்றியை இந்நாட்டில் கௌதம புத்தர் திடீரென மேலிருந்து இறங்கிவந்ததுபோல தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆனால் இந்நாட்டில் இனவாதம் இன்னும் உள்ளது. எனவே, எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘இனவாதம் இன்னும் இருக்கின்றது. எனவே, எமக்கான பிரதிநிதித்துவத்தையும் அநுரவின் கைகளுக்கு வழங்கிவிடமுடியாது. அவ்வாறு வழங்க முற்பட்டால் அது ஆபத்தாகும்.
நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு பணி இறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அந்நடவடிக்கை அமைந்தால் நிச்சயம் வரவேற்போம்.
நாங்கள் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் என்பதால்தான் ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு வரமுடியாதுள்ளது. சட்டம் இதற்கு தடையாக இல்லை. எனவே, இப்படியான சூழ்நிலையில் எமது பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை தமிழ் பேசும் மக்கள் உணர வேண்டும்.
அநுர இன்று கூறும் விடயங்களையெல்லாம் நாம் 10 வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம்.” -என்றார்.
