அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் ஆதரவை பெறக்கூடிய ஆளுமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமானால் அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார். வடக்கிலும், தெற்கிலும் வாழும் அனைத்து இன மக்களினதும் ஆதரவைப் பெறக்கூடிய ஆளுமை, சக்தி மற்றும் அனுபவம் சஜித் பிரேமதாசவுக்கு உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் கடும் சவால்களுக்கு மத்தியில் 45 வீத வாக்குகளைப் பெற்றார். எனவே, இம்முறை அவருக்கு நிகரான வேட்பாளர்கள் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமானால் அதிலும் இலகுவில் 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெறும். பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி எமது வசமே உள்ளது.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதாளக்குழுவுக்கு முடிவு கட்டப்படும்” – என்றார்.
