பசறை பிரதேச சபை ஊடாக முன்னெடுக்கப்படும் ‘ஒலிபரப்பு அறிவுறுத்தல்கள்’ அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் மட்டும் அமைவதினால் மொழி புரியாத தமிழ் பேசும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
பசறை பிரதேசத்தில் பிரதேச சபையில் 07 தமிழ் பேசும் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் நிலையில், 52 வீதம் தமிழ் பேசும் மக்களும் இருந்து வருகின்றனர். இத்தகைய ஆரோக்கியச்சூழல் இருந்த போதிலும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச சபையினால் பசறை பிரதேசத்தில் நடாத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அவசர அறிவுறுத்தல்கள் வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் ஒலிபரப்புக்கள் அனைத்துமே, தனிச்சிங்கள மொழியிலேயே, அமைகின்றன.
இதனால் மொழிபுரியாத தமிழ் பேசும் மக்கள், குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவே, அவசர அறிவுறுத்தல்கள் பற்றியோ அறிவதற்கு வாய்ப்பில்லை.
பிரதேச சபை தமிழ் பேசும் உறுப்பினர்களிடம் இது குறித்து, பிரதேச சபை அமர்வில் முன்வைக்குமாறு கூறினாலும், அவர்கள் அக்கூற்று, நிராகரிக்கப்படும் நிலையிலேயே இருந்து வருகின்றனரென்று, பசறை பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எம். செல்வராஜா, பதுளை










