” ஐக்கிய தேசியக் கட்சி செய்யும்போது ‘தவறாக’ இருந்த ஒரு விடயம் நாம் செய்யும்போது சரியாகிவிடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், தொழிற்சங்க பிரமுகர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அத்துரலிய ரத்தன தேரர் உட்பட மேலும் பலர் பங்கேற்றனர்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையகத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் தீர்மானத்தை முறியடிப்பது தொடர்பில் இதன்போது தீவிரமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இதற்கான அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடபோவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில,
” ஐக்கிய தேசியக்கட்சி செய்யும்போது தவறாக இருந்த ஒரு விடயம் நாம் செய்யும்போது சரியாகிவிடாது. சரி என்றால் அதை யார் செய்தாலும் சரி. தவறென்றால் அதை யார் செய்தாலும் தவறு. நபர்கள் முக்கியமில்லை.
எம்மால் உருவாக்கப்பட்ட அரசு, எமது அணி என, தவறு இடம்பெறும்போது அமைதியாக இருந்தால் அரசிடமிருந்து மக்கள் விலகிவிடுவார்கள். அரசை பாதுகாக்கவே நாம் செயற்படுகின்றோம்.
மக்கள் சபைக்கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி நிச்சயம் நடக்கும்.”- என்றார்.