பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியை கலைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் நீக்குவதற்கு அந்த முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் முன்னணியில் உள்ள முன்னாள் எம்.பி. திலகராஜிற்கு அறிவித்துள்ளதாகவும், இதனை அறிந்துகொண்ட அவர், அரசியல் கட்சியைக் கலைப்பதற்கான கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவில் முன்வைத்துள்ளதாகவும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், முன்னணியின் பொதுச் செயலாளரின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையாளரிடமிருந்தும் இதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
முன்னணியின் செயற்குழுவைக்கூட்டி, பொதுச் செயலாளரை பதவி விலக்குவதற்கான கட்சித் தலைவர் திகாம்பரத்தின் திட்டத்தை, திகராஜின் உள்ளே உள்ள சகாக்கள் அம்பலப்படுத்திய நிலையில், இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திகராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவர் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வந்தார். தேசியப் பட்டியலில் திலகரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் வழங்கப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்துவந்த திலகர், தொழிலாளர் முன்னணியின் உறுப்பினர்கள் பலரையும் இணைத்துக் கொண்டு, புதிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், தேர்தல் ஆணையாளரிடம் தொழிலாளர் தேசிய முன்னணியைக் கலைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அறிந்துகொள்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், அந்த முயற்சி இந்த செய்தியைப் பிரசுரிக்கும் வரை வெற்றியளிக்கவில்லை.
