இலங்கையில் டிஜிட்டல் ஊடக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் MediaInc திட்டத்தில் குருவி தளம் உள்வாங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மூன்று முன்னணி ஊடகவியலாளர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஊடகப்பரப்பில் சாதகமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கின்றது.
தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்று ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச ரீதியிலான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
டிஜிட்டல் ஊடகத்தின் உள்ளடக்கம், வர்த்தகமயமாக்கல் மற்றும் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புக்களில் தெளிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளதுடன், அவர்களது ஊடங்களுக்கும் தொழில்சார் உதவிகள் வழங்கப்படவுள்ளன.
மக்கள் தகல்களை பெற்றுக்கொள்வதற்கான அவகாசத்தை வியாபிப்பதற்கும், மாற்று செய்தி மூலங்களை வலுப்படுத்துவதற்கும் இந்த முனைப்புக்கள் வழியமைக்கும் என ஜனநாயக இலங்கைக்கான ஊடகவலுவூட்டல் Media Empowerment for a Democratic Sri Lanka (MEND) திட்டம் தெரிவித்துள்ளது.
நம்பகமானதும், பக்கச்சார்பற்றதுமான செய்திகளை மக்கள் எளிதில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

Sri Lanka Business TV சமூக ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர் ஜயந்த கொவிலகொடகே, ஆங்கில செய்தி அறிக்கையிடலில் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள ஹெஷான் டி சில்வா மற்றும் kuruvi.lk இணைய தளத்தின் ஸ்தாபகர் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் ஆகியோருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதிலும் உள்ள சுமார் 80 மேற்பட்ட முன்னணி ஊடகவியலாளர்கள் இந்த பயிற்சியை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் பல்வேறு நேர்காணல் மற்றும் தெரிவு முறைமைகளின் அடிப்படையில் இந்த மூன்று பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
IREX என்னும் சர்வதேச ஊடக நிறுவனத்தின் நிபுணத்துவ பயிற்சியாளர்களினால் இந்த ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஊடகம் மற்றும் டிஜிட்டல் செய்திகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள முன்னாள் பத்திரிகையாளரான டேவிட் ஹேவர்ட், பயிற்சியாளர் மற்றும் ஆலோசகரான வெண்டி பில்மர், தற்பொழுது உலகின் முன்னணி ஒளிபரப்பாளர்களுக்காக ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி வருகின்றார் என்பதுடன் பிபிசியில் சிரேஸ்ட பதவிகளை வகித்தரவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளடக்க உத்தி மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றில் நிபுணரானர் என்பதுடன் ஊடகத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட நீல் மூர், ஆகியோர் இந்த பயிற்சியாளர் குழாமில் அங்கம் வகிக்கின்றனர்.
மக்களின் ஜனநயாக உரிமைகளை உறுதி செய்வதற்கு ஆற்றல் மிக்கத்தும், காத்திரமானதுமான ஊடகப் பங்களிப்பினை முழுமையாக ஆதரிப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக MEND இன் தலைவர் தெரிவிக்கின்றார்.
டிஜிட்டல் தளத்தில் குருவி :
குருவி தளம் சார்பாக அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான கிருஸ்ணசாமி ஹரேந்திரன் இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னணி ஒளி, ஒலிபரப்பு நிறுவனங்களில் பல பதவிகளை வகித்துள்ள ஹரேந்திரன், பி.பி.சீ உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டுள்ளார்.
சமூகம் சார்பான கரிசனையை அதிகளவில் வெளிப்படுத்தும் ஹரேந்திரன் பல்வேறு மக்கள் போராட்டங்களில் இன்றியமையா ஊடகப் பங்களிப்பினை களத்திலிருந்து வழங்கியுள்ளார்.
இதுகுறித்து குருவியின் பிரதம ஆசிரியர் ஹரேந்திரன் பேசும்போது, 80 விண்ணப்பங்கள் கிடைத்திருந்த போதிலும், தமிழ் மொழியில் குருவி தளமும் தானும் தெரிவுசெய்யப்பட்டமை உண்மையில் ஒரு சர்வதேச அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். இது மலையக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டார்.

”இந்தப் பயணத்தின் அடுத்தடுத்த கட்டங்களில் ஏனைய ஊடக நண்பர்களும் தெரிவாக வேண்டும் என்றும், சர்வதேச தரத்தையும், பயிற்சிகளையும் ஊடக நண்பர்களுடன் எப்போதும் பகிர்ந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய ஊடகப் பரப்பில் மலையகம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், டிஜிட்டல் தளம் ஒரு வரமானது. அதனை இளைஞர்கள் தற்போது வளமாக்கி வருகின்றனர். இந்தப் பயணத்தில் எமது இளைஞர்கள் இன்னும் சாதிப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் குருவி தளம் என்பது தனிநபர் வெற்றியல்ல என்றும் அதுவொரு கூட்டு முயற்சியென்றும், இந்த முயற்சியில் இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள் என்றும் கூறினார்.
