மலையகத்தில் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவும் நிலம் தாழ் இறங்கும் அபாயமும் ஏற்பட்டு வருகின்றது.
ஹப்புத்தளை பிரதேச செயலகப் பிரதேசத்திலுள்ள ஹப்புத்தளை, தியத்தலாவை, கஹகொல்ல, பின்கேதென்ன, கோமாரிகொட மற்றும் பண்டாரவளை, வெலிமடை போன்ற பிரதேசங்களில் பலத்த மழை பெய்து வருவதால் ஹப்புத்தளை பிரதேச சபைக்கு முன்னாலுள்ள தியத்தலாவை ஜும்மா பள்ளிவாசல் கட்டடத்திற்கு பின்னுள்ள அரச வன பிரதேசத்தில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கட்டடத் தொகுதில் அமைந்துள்ள ஜும்மா பள்ளி வாசல், கடைகள் மற்றும் அதன் அருகிலுள்ள வீடுகளில் தங்கி இருப்போரை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படி ஹப்புத்தளை பிரதேச செயலாளர் நேற்று முன்தினம் (27) அறிவித்தார்.
இதனையடுத்து குறித்த கட்டடத் தொகுதிலுள்ள பள்ளிவாசல், கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதேச வாசிகள் ஈடுபட்டனர்.
கடந்த இரு நாட்களாக தியத்தலாவை பிரதேசத்தில் இடை விடாது கனமழை பெய்து வருவதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.










