துரோகத்துக்கு துணை நிற்கவேண்டாம் – சோ. ஸ்ரீதரன் தெரிவிப்பு

பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட பொகவந்தலாவை பிரதேச தோட்டங்களில் தொழிலாளர்களின் நாளாந்த வேலை அளவை அதிகரிக்குமாறு தோட்ட நிர்வாகங்களால் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
பொகவந்தலாவை பிரதேசத்தில்  கொட்டியாகலை,பொகவான, பொகவந்தலாவ,கெம்பியன்,லொயினோன்,பெற்றசோ ஆகிய தோட்டங்கள் பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியால் நிர்வாகிகப்படுகின்றன.
இந்தத் தோட்டங்களை உள்ளடக்கிய 23 தோட்டப் பிரிவுகளில் சுமார் 4,000 தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர்.
இவர்கள் தற்போது நாளாந்த அடிப்படைச் சம்பளத்துக்காக பறிக்கப்படுகின்ற தேயிலைக் கொழுந்தின் அளவைவிட மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகங்களால் தோட்ட தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக தோட்டத் தலைவர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்பதாக தோட்ட நிர்வாகங்கள் சொல்லும் வேலையின் அளவைப் பூர்த்திச் செய்வதற்கு உடன் படாவிட்டால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரமே வேலை வழங்கப்படும் என்று குறிப்பிட்ட தோட்ட நிர்வாகங்களால் தொழிற்சங்க தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தோட்டத் தலைவர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறான நிர்பந்தத்தினை தொழிலாளர் தேசிய சங்கம் எவ்விதத்திலும் அனுமதிக்காது.
மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்கிவிட்டு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
எனவே பொகவந்தலாவ பிரதேச தோட்டத் தொழிலாளர்களின் வேலைப்பளுவை அதிகரிப்பதற்குத் தோட்ட நிர்வாகங்களுக்கு எந்தவொரு தொழிற்சங்கமும் துணைபோகுமானால் அது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும்.

Related Articles

Latest Articles