இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளரான முகமது சிராஜ் வரிசையாக வீழ்த்தினார்.
அவரது பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்களான மார்க்ரம், எல்கர், டோனி டி ஜோர்ஜி, டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரைன் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்சில் வெறும் 9 ஓவர்கள் மட்டுமே வீசிய சிராஜ் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெறும் 23.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் எந்த ஒரு துடுப்பாட்ட வீரரும் 20 ஓட்டங்களைக் கூட தொடவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 15 ஓட்டங்களைப் பெற்றார்.
தற்போது துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி ஒரு விக்கெட்டுகளை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.