ஒரு சமூகத்தின் வளர்ச்சியிலும், மக்களை நல்வழிப்படுத்துவதிலும் மதங்களின் பங்கு அளப்பரியது.எல்லா மதங்களும் மக்களுக்கு நன்மைகளையே போதிக்கின்றன. அறவழியில் பயணிப்பதற்கு வழிகாட்டுகின்றன.எனவே, வணக்கஸ்தலங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற விடயத்தில் எவருக்கு எதிர்ப்பு இருக்கமுடியாது.
ஆனாலும் அபிவிருத்தி என்ற போர்வையில் மோசடிகள் இடம்பெறுமானால் அதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. கண்டி மாவட்டத்தில், கலஹா – தெல்தோட்டையில் உள்ள கோவிலொன்று தொடர்பான தகவல்களை இங்கு பதிவிடுகின்றோம். தவறுகளை சுட்டிக்காட்டி, பணிகள் சிறப்பாக தொடரவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே பதிவு பதிவிடப்படுகின்றது.
தெல்தோட்டையில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான ஆலயமொன்று , ஆலய நிர்வாக சபையினரின் தலமையின்கீழ் புனரமைக்கப்பட்டுவந்தது.
ஆலயத்தின் நிர்மாணப்பணிகளுக்கு நகர வர்த்தகர்கள், பெருந்தோட்ட மக்கள், அரசியல் பிரமுகர்கள், கொடையாளர்கள் என பலரும் தம்மால் முடிந்த உதவிகளை பணமாகவும், பொருளாகவும் வருகின்றனர்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற நன்கொடைகள் உரிய வகையில் கையாளப்படுவதில்லை எனவும், கணக்குகள்கூட முறையாக காண்பிக்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீண்டநாட்களாக கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவந்தாலும் பணிகள் இறுதிபெறவில்லை. ஆலயப்பணிகள் முழுமை பெறாததால் இப்பகுதியில் உள்ள இந்து மக்கள் கவலையுடன் இருக்கின்றனர். நிர்மாணப்பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவ்விவகாரம் தொடர்பில் சமய விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மக்கள் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இக் கோவிலானது இந்து கலாச்சார திணைக்களத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர்களே முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஆலயத்தின் பரிபான சபைத் தலைவர் சின்னையா சத்தியநாதனிடம் வினவினோம்.
” ஆலயமொன்றை புனரமைப்பதென்பது இலகுவான காரியமல்ல. சிற்சில குறைப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு போதுமான பணம் இல்லை. கிடைத்த உதவிகளை நிர்மாணப் பணிகளுக்காக முழுமையாக பயன்படுத்தி உள்ளோம். தொடர்ந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.” – என்றார்.
மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்










