பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக அக்கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திர மக்கள் சபை, தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சிகளாக செயற்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற ஐந்து தேசியப்பட்டியலில், அக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி பதவிகளில் ஒன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் எஞ்சிய நான்கு எம்.பி பதவிகளுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி, எம்.பி பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அக்கட்சியில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட எம்.பி.க்களை தேசியப்பட்டியலில் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தியில் கூட்டணியாகப் போட்டியிட்டது. அப்போதும் வாக்குறுதியளித்தபடி ஏனைய கட்சிகளுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படவில்லை என்பதுடன் அக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரே அந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நிரப்பப்பட்டனர்.










